சென்னை :
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்பு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஈபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கடந்த ஜூலை மாதம் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று நீதிபதி பி.பி. பாலாஜி முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது ஈபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சூர்யமூர்த்தி 2018 முதல் கட்சியினர் அல்ல. அவர் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர். எனவே, கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது” என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த சூர்யமூர்த்தி தரப்பு வழக்கறிஞர், “கட்சி விதிப்படி அவர் தொடர்ந்து உறுப்பினராகவே உள்ளார். மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பமும், அடிப்படை விதியும் ஆகும். பொதுக்குழுவால் அதனை மாற்ற முடியாது” எனக் கூறினார்.
மேலும், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியுடன் கூட்டணி இல்லாமல் சுயேட்சையாகவே தேர்தலில் போட்டியிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.














