ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த முக்கிய மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக அவலங்களைத் வேரறுக்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுப்பதில் அதிகாரிகளின் பங்கு குறித்து ஆட்சியர் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, “இளம் வயது கர்ப்பம் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனடியாகக் குழந்தை பாதுகாப்பு அலகிற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்து கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெறும் சட்டத்தால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது, அடிமட்ட அளவில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளிடையே தங்களது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதியோர் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பாகக் காப்பகங்களில் ஒப்படைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். “குழந்தைகள் பிச்சையெடுப்பதையோ அல்லது குழந்தை தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்படுவதையோ கண்டறிந்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தேர்தல் காலங்களில் இதுபோன்ற சமூகப் பிரச்சனைகள் மற்றும் விதிமீறல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அந்த சமயத்தில் அதிகாரிகள் இரட்டிப்பு விழிப்புடன் செயல்பட வேண்டும். எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
குழந்தை உதவி மையத்தின் (Childline) மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், புகார்தாரர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் பாலசரஸ்வதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப்பிரியா உள்ளிட்ட முக்கியத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
