தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தலை நவீன தொழில்நுட்ப முறையில் எவ்விதக் குறைபாடுமின்றி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் காணொலி காட்சி வாயிலாகத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு இணையவழி (Information and Communication Technology) பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார்.
இந்தக் கலந்தாய்வின் போது, தேர்தல் பணிகளில் ஆன்லைன் மென்பொருள்களைப் பயன்படுத்துவது, வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் வரும் புகார்களைத் தொழில்நுட்ப ரீதியாகக் கையாள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்குவதில் முழுமையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், தகவல் பரிமாற்றத்தில் எவ்விதத் தொய்வும் ஏற்படக்கூடாது என்றும் ஆட்சியர் அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார். மேலும், வாக்குப்பதிவு மையங்களில் இணையதள வசதிகள் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பைப் பராமரிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் முக்கியத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவது குறித்து உறுதி ஏற்றனர்.
















