சிதம்பரம் :
“கல்விக்கு வயது தடை அல்ல” என்பதைச் செயலில் நிரூபித்து, சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான கோதண்டராமன், பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
கோதண்டராமன் 1965ஆம் ஆண்டு தனது சொந்த ஊரிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த நிலையில், பெற்றோர் இருவரும் இறந்துபோனதால் கல்வியை நிறுத்த நேர்ந்தது. தாத்தா-பாட்டியின் மேற்பார்வையில் சிறிது காலம் கல்வியைத் தொடர்ந்தாலும், குடும்ப சூழ்நிலையால் பள்ளி செல்ல முடியவில்லை.
அப்போது அவரது தாய் மாமன் ராஜகோபால் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். அவரின் ஊக்கத்தால், கோதண்டராமன் ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் சேர்ந்தார். மாத சம்பளமாக ரூ.4.35 காசுகள் கிடைத்தது. தொடர்ந்து 1980ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் கிடைத்ததும், மொத்தம் 30 ஆண்டுகள் அந்தத் துறையில் உழைத்து 2010இல் ஓய்வு பெற்றார்.
ஓய்விற்கு பிறகு கல்வியை மீண்டும் தொடர விரும்பிய அவர், 2002இல் எட்டாம் வகுப்பு தேர்வை கடலூரில் எழுதி வெற்றி பெற்றார். அதனையடுத்து 2024ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து முயற்சி செய்து, இவ்வாண்டு சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வில் வெற்றிபெற்றார்.
தமது சாதனை குறித்து கோதண்டராமன் கூறியதாவது :
“வயது என்பது கல்விக்கு தடை அல்ல. என்னை பார்த்து மற்ற மாணவர்களும் ஆர்வத்துடன் பாடம் படித்து தேர்வு எழுதினார்கள். எனது வெற்றிக்கு என் மகனின் உற்சாகம்தான் முக்கிய காரணம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.