“புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டுகிறார்… ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில் !

சென்னை : 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிரொலியைக் கிளப்பியுள்ளது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் கண்டனத்திற்கும் எதிர்வினைக்கும் இடமளித்துள்ளன.

தமது சமூக வலைதள பக்கம் X-இல் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “தென்னக மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளின் காரணமாக, பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அபாயத்தில் உள்ளன. இது பா.ஜ.க.வின் சதித் திட்டமாகும். 1971 சென்சஸ் தரவுகளுக்கு பதிலாக 2027 கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையாக அமையும், இது தென் மாநிலங்களை தண்டிக்கும் ஒரு திட்டமாகும்,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினின் முக்கிய குற்றச்சாட்டுகள் :

தொகுதி மறுவரையறை வஞ்சகபூர்வமானது, தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன, பா.ஜ.க. வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது, ஜம்மு காஷ்மீர் மாதிரியான நிலை தென் மாநிலங்களுக்கும் வரலாம்.

“அதிமுக போன்ற கட்சிகள் பா.ஜ.க.வுக்கு அடிமையாக மாறினாலும், திமுக தலைமையில் தமிழ்நாடு ஒற்றுமையாக போராடும்” என்றார் ஸ்டாலின்.

எடப்பாடியின் பதில் :

இதை எதிர்த்து பதிலளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் கூறுவது ‘அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்’ என்ற படக் காமெடியைப் போலவே உள்ளது” என ஏளனமாக விமர்சித்தார். மேலும், “நான் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் உரிமைகள் குறைக்கக் கூடாது என்பதை தெளிவாகத் தெரிவித்துள்ளேன். எந்த நேரத்தில் மறுவரையறை நடந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும்பட்சத்தில், அதனை எதிர்ப்பதில் முதல் குரல் நான்தான் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடியின் குற்றச்சாட்டுகள் :

திமுக அரசு நடத்திய ஆட்சி தவறுகளைக் மறைக்க, மக்கள் மனதில் பீதி ஏற்படுத்துகிறார்கள்.

தமிழக மக்கள், இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவாக அறிந்துள்ளனர்.

மக்கள் வேலைவாய்ப்பு இழப்பும், பெண்கள் பாதுகாப்பின்மையும் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

Exit mobile version