“குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள்” – நடிகர் ரவி மோகன்

உலக குறைப் பிரசவ தினத்தையொட்டி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குறைப் பிரசவத்தில் பிறந்து வளர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, குறைப் பிரசவம் குறித்த புரிதலை சமூகத்தில் உருவாக்குவதைக் குறிக்கோளாக கொண்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன், குறைப் பிரசவம் குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்தையும் சவால்களையும் நினைவுபடுத்தினார். அவருடைய குடும்பத்திலும் இதுபோன்ற அனுபவம் உள்ளதாகவும், அந்த நிலையில் பெற்றோர் சந்திக்கும் பதட்டத்தை அவர் நெருக்கமாக அறிந்ததாகவும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளை ஒவ்வொருவரும் கவனமாக பின்பற்றி குறைப் பிரசவத்தைத் தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை குறைக்கும் விதமான சொற்களை பயன்படுத்தாதீர்கள். இக்குழந்தைகளைப் பற்றிய மூடநம்பிக்கைகள் மற்றும் தாழ்வான கருத்துக்களை குடும்பத்தினரே முதலில் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

குழந்தைகளின் மனநலத்தையும் மனித மதிப்பையும் கருத்தில் கொண்டு சமூகமே பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள்.

Exit mobile version