டெல்லி : நிதி ஆயோக் கூட்டம் மே 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு அந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த ஆண்டு பங்கேற்காத நீங்கள், இந்த ஆண்டு ஏன் பங்கேற்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வலியுறுத்தவே பங்கேற்கிறேன்” என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இரு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஒரு கடும் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில்,
“முந்தைய நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டியதற்கு காரணம் தமிழ்நாடு அல்ல – உங்கள் குடும்பம் தான். ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?”
என்று தொடங்கி,
“CBI ரெய்டு நேரத்தில் நீங்கள் மற்றும் உங்கள் தந்தை 63 தொகுதிகளை தாரைவார்த்தபோது மேல் மாடியில் தவழ்ந்தீர்களா, ஊர்ந்தீர்களா?” எனக்கூடிய கடுமையான சொற்களால் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
மேலும், பல விவகாரங்களில் ஸ்டாலின் தலைமையிலான அரசைக் குறிவைத்து, பாலியல் குற்றவாளிகள், கஞ்சா தொடர்புகள், மாணவியின் FIR விவகாரம், காவல்துறை விசாரணை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதிவின் முடிவில்,
“யார்அந்ததம்பி?”
எனும் கேள்வியை மீண்டும் எழுப்பி, TASMAC கொள்ளையிலும் முதல்வரின் குடும்ப பங்கு இருப்பதாகவும் சந்தேகம் வலுப்பெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரஸ்பர விமர்சனங்கள், நிதி ஆயோக் கூட்டத்திற்கான தமிழக அரசின் பங்கேற்பை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.