“இரட்டைப் பாதையிருந்தும் தீராத ரயில் துயரம்”: சென்னை – குமரி வேகப்பயணம் எப்போது?

கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள சூழலில், அந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் மாவட்ட மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. தற்போதைய நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில்களும் வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டத்தால் திணறி வருகின்றன. இந்த ரயில்களில் காத்திருப்பு பட்டியல் (Waiting List) முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்டுகொண்டே செல்வது பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றிலும் கூட கூட்டம் நிரம்பி வழிவது தென் மாவட்ட வழித்தடங்களில் உள்ள அதிகப்படியான தேவையையே காட்டுகிறது.

இந்தச் சூழலில், இரட்டைப் பாதை வசதியை முழுமையாகப் பயன்படுத்தி கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், தற்போது இயக்கப்படும் ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான இருப்பு பாதையாக சென்னை – கன்னியாகுமரி தடம் விளங்குகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரித்து, மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்குவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் இதுவரை மத்திய ரயில்வே அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும். சென்னை எழும்பூர் – மதுரை – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வரையிலான 805 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மெயின் லைனில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் தேவையான அதிவேக பாதை அமைத்தல் மற்றும் நவீன சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் (Signal Upgradation) போன்றவை இதுவரை எட்டா கனியாகவே இருந்து வருகின்றன.

வட மாநிலங்களில் பல வழித்தடங்கள் அதிவேகப் பயணத்திற்குத் தயாராகி வரும் நிலையில், அதிக வருவாய் தரும் தென்னகத்தின் இந்த முக்கிய வழித்தடம் புறக்கணிக்கப்படுவது நியாயமற்றது எனப் பயணிகள் சங்கத்தினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சென்னை முதல் குமரி வரையிலான பாதையில் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்தி, தண்டவாளங்களின் உறுதித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் ரயில்களின் வேகத்தை கணிசமாக உயர்த்த முடியும். இவ்வாறு வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பயண நேரம் குறைவது மட்டுமன்றி, பயணிகளுக்கான சேவைத் தரம் மற்றும் வசதிகள் மேம்படும் என்றும், இது ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்றும் பயணிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version