காசிக்கு இணையான புண்ணிய இடம் என்று போற்றப்படும் மயிலாடுதுறை காவிரி துலா கட்ட படித்துறை பகுதியை நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர், புனித காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வழியே புனித காவிரி ஆறு ஓடுகிறது. காவிரி ஆற்றின் மையப்பகுதியில், நந்தி தேவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளதும், 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளதுமான புனித துலா கட்ட காவிரி பகுதி அமைந்துள்ளது. காசிக்கு இணையாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துவோர், கூட்டமாக மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது குளிக்கும் பக்தர்கள் இதனால் காயமடைகின்றனர். மேலும் நகரின் குப்பைகளை வீசி செல்லும் இடமாகவும் புனித காவிரி துலா கட்டம் மாறிவிட்டது. துலா கட்ட தீர்த்த படித்துறையை தூய்மைப்படுத்தும் பணி, நடைபெற்றது. நகராட்சி ஊழியர்கள், மற்றும் பூம்புகார் அரசினர் கல்லூரி, ccc சமுதாயக் கல்லூரி மாணவிகள் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மூட்டை மூட்டையாக குப்பைகளை கல்லூரி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மண்ணில் புதைந்திருந்த மதுபான பாட்டில்களை அப்புறப்படுத்த மிகவும் சிரமமாக உள்ளதாக, மாணவிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கையை மேற்கொண்டு இரவில் காவிரி ஆற்றில் உள்ளே மது அருந்துவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
