தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுக்குத் தமிழக அரசு தற்காலிகப் பணியை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும் என அந்தப் பெண் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் துரைச்சாமிபுரம் அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர். இதில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா (55) என்பவரும் அடக்கம்.
மல்லிகாவின் மகள் கீர்த்திகா (33), பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த இவர், தற்போது தாயையும் இழந்து ஆதரவற்ற நிலையில், தனக்கு நிவாரணமும், நிரந்தர வேலை வாய்ப்பும் வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்தார்.
கீர்த்திகாவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரைத் தனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், வேண்டிய உதவி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கீர்த்திகாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, புளியங்குடி நகராட்சியில் ‘டேட்டா என்ட்ரி’ (தரவு உள்ளீட்டாளர்) பணிக்கான ஆணையை வழங்கினார்.
தனக்கு வழங்கப்பட்ட பணியானது தற்காலிகமானது என்பதால், கீர்த்திகா அதிருப்தி அடைந்தார். தான் எம்.ஏ., பி.எட்., வரை படித்துள்ளதாகவும், தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற ஒரு நிரந்தர அரசு வேலையை வழங்க வேண்டும் என அவர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். முதலமைச்சரின் நேரடி உறுதியளிப்புக்குப் பிறகும், கல்வித் தகுதியைக் குறைத்துத் தற்காலிகப் பணி வழங்கப்பட்டது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாகராஜ் கூறுகையில், “விபத்துப் போன்ற சம்பவங்களில் நேரடியாக நிரந்தர அரசுப் பணி வழங்குவதில்லை. கீர்த்திகாவின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது மாதம் ₹12,000 ஊதியத்தில் இந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மாறினாலும் அவரது பணி தொடரும். அவரது விருப்பப்படி ஆசிரியைப் பணி கிடைத்தால் செல்லலாம். புளியங்குடி நகராட்சியிலேயே நிரந்தரப் பணியிடம் காலியானால் அவரை நியமிக்க வாய்ப்புள்ளது. அவர் மீது அரசு கருணையுடன் நடந்து கொள்ளும்,” என்று விளக்கம் அளித்தார். எவ்வாறாயினும், நிரந்தரப் பணி கிடைக்கும் வரை இந்தத் தற்காலிகப் பணியை ஏற்பதா, இல்லை நிரந்தர வேலைக்காகப் போராடுவதா என்ற குழப்பத்தில் கீர்த்திகா உள்ளார்.
















