டெல்டா மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக பருவக்கால ஊழியர்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், அனைத்து மண்டலம் ஒருங்கிணைந்த பருவக்கால பணியாளர்களின் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பஹாத் முகமது தலைமை வகித்தார். பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உணவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு செம்படர் இறுதிக்குள் சுமார் 1,575 பேரை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்திருந்தார். ஓர் ஆண்டாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டிச.29-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் பருவகால பணியாளர்கள் அமைச்சரிடம் பணி நிரந்தரம் தொடர்பாக கேட்டபோது ஜன.2-ஆம் தேதிக்குள் 1,400 பேரை பணி நிரந்தரம் செய்யப்போவதாக பணியாளர்கள் மத்தியிலும், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவித்தார். அதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஜன.12-ஆம் தேதி 10 மண்டலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இம்மாத இறுதிக்குள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்குவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார். இதில், நிர்வாகிகள், ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
















