தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டை தமிழ் தேசியப் பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
உரையின்போது, தற்போதைய மத்திய மற்றும் மாநில ஆட்சிகளை கடுமையாக விமர்சித்த சீமான், “மக்களாட்சியை தன் மக்கள் ஆட்சியாக மாற்றிவிட்டனர்” என கூறினார். மேலும் அவர்,
“மத்திய அளவில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என சொன்னவர்கள், இப்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என மாற்றியுள்ளனர்” என குற்றம்சாட்டினார்.
தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பதவியில் உள்ள ஆட்சியாளர்கள் எதையும் தமிழர்களுக்காக செய்து தரவில்லை என்றும் சீமான் சாடினார். “திமுக ஆட்சியால் கச்சத்தீவை மீட்க முடியாது. தமிழ் தேசிய ஆட்சி வந்தால்தான் அது சாத்தியமாகும்” என்ற அவர், “தமிழ் தேசிய அரசு மலரும்போது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்டெடு, அல்லது என்னை பிரித்து விடு” என வலியுறுத்தினார்.
“எது உண்மையான கூட்டரசு தத்துவம்?”
சமூக நீதி, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகள் வெறுமனே வடிகட்டி பேசப்படும் மொழிகள் மட்டுமே என சீமான் விமர்சித்தார். “நம் நாடு உண்மையான இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டுமானால், மாநிலங்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதுவே உண்மையான கூட்டரசுத் தத்துவம்” என தெரிவித்துள்ளார்.