திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியின் அருகே அமைந்துள்ள அரசு சமூக நீதி விடுதியில் தங்கி பள்ளி படிப்பை பயின்ற இவர் இன்று மதிய உணவு அருந்துவதற்காக விடுதிக்கு வந்து சென்ற நிலையில் பள்ளி வகுப்பறையில் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.
அவரை உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மாணவியரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும் மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் மாணவி தங்கி இருந்த விடுதி பள்ளி ஆகியவற்றில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.