மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சியரகம் மன்னம்பந்தலில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மணக்குடியில் கட்டப்பட்டு, அதுவும் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை நகரில்; போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைய வேண்டிய அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ரூ.185.35 கோடி மதிப்பீட்டில், மயிலாடுதுறை நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகம் அருகில் நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, மக்களவை உறுப்பினர்.சுதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார் (மயிலாடுதுறை), நிவேதாமுருகன்(பூம்புகார்) ஆகியோர் முன்னிலையில் பணிகளை தொடக்கி வைத்தார்.
பூம்புகார்-கல்லணை சாலையில் தொடங்கி தரங்கம்பாடி சாலை மாவட்ட ஆட்சியரகம் வரை முதற்கட்டமாகவும், அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகம் முதல் மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலை வரையிலும் இந்த புறவழிச்சாலை அமையவுள்ளது. கல்லணை சாலை, சிதம்பரம் சாலை, தரங்கம்பாடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை என மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் இந்த புறவழிச்சாலை மூலம் இணைக்கப்பட உள்ளதாலும், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து செல்வதில் காலவிரயம் குறையும் என்பதாலும் இத்திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













