குன்றத்துார், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது.
கடந்த 2023ம் ஆண்டு, ‘மிக்ஜாம்’ புயலின்போது பெய்த கனமழையால், ஏரியின் 19 கண் மதகு அருகே, கரையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு சேதமாகியது.கரை அரிப்பை தடுக்க, மண் மூட்டைகள் அடுக்கப்பட்டன. இதைதொடர்ந்து, ஏரி கரையை சீரமைத்து பலத்தப்படுத்த, நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன் பின், 22.95 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. இதற்கு அரசு நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன் ஏரிக்கரையை சீரமைத்து பலப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.தற்போது, ஏரியில் 20 அடி ஆழத்திற்கு மேல் நீர் நிரம்பியுள்ளது. இதனால், ஏரியின் உட்புறம் கரையை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கரையின் மேல் பகுதி, வெளிப்புறம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் கைப்பிடி சுவர், அலை தடுப்பு சுவர், உட்புற கரை பாதுகாப்பு கான்கிரீட் சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, 22.95 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கியுள்ளோம். தற்போது, ஏரியில் 20.1 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளதால், ஏரியின் உட்புற கரை பாதுகாப்பு கான்கிரீட் சுவர் கட்டுமான பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. நீர் மட்டம் 14 அடிக்கு கீழ் சென்ற பின், இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஏரி கரையை சீரமைக்கும் பணிகளை, ஓராண்டிற்குள் முடிக்க உள்ளோம் என்று கூறினார்.