தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தமிழக அரசு சார்பில் பூமி பூஜை விழா நடைபெறும் போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் காரை வழிமறித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மனு கொடுக்க வந்த ஒருவர் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவரை தாக்குவதற்கும் முயற்சி செய்தார்.
இதனால் மேலும் பரபரப்பு நிலவியது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலுக்கு தமிழக அரசு சார்பில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபத்திற்கான பூமி பூஜை விழாவினை இன்று உத்தமபாளையம் கோட்டாட்சியர் செய்யது முகமது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் விழாவினை நடத்தினார்கள்.
அரசு அலுவலர்கள் இந்து சமய அறநிலைத்துறையினர் என ஏராளமானோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது கோவிலுக்குள் இரண்டு பிரிவுகளாக வருகை தந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குச்சனூர் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க கூடாது எனக் கூறியும்
மற்றொரு தரப்பினர் மின் மயானம் அமைக்க வேண்டும் என கூறியும் திடீரென இரண்டு பிரிவுகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்வதற்கு தடை விதித்தனர்.
அப்போது விழா நடைபெறும் இடத்திலிருந்து வெளியே வந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் காரை வழிமறித்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் அவர் அவர்களிடம் சமாதானம் செய்ய முயன்ற போது அங்கு வருகை தந்த மற்றொரு தரப்பினர் மயானம் தேவை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வாக்குவாதம் செய்து மனுவினை கொடுக்க முயற்சி செய்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்க வாக்குவாதம் முற்றியதால் மனு கொடுக்க வந்தவரை கையால் அடிக்க முயற்சி செய்தார் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் இரு தரப்பினரிடமும் புகார் மனுவினை பெற்றுக் கொண்ட
பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன் பிறகு அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது காரில் ஏறி சென்றார்.
அரசு விழா நடைபெறும் இடத்தில் இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
