திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறையினர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.அதன் அடிப்படையில் 90 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14 வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஜோலார்பேட்டை அரசு சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 28 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என 7 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மண்டல அளவிலான போக்குவரத்து தலைவர் அஸ்பாக் அகமது,வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் சம்பத்குமார் கலந்து கொண்டனர்.
அப்போது சாலையில் சிக்னல் விதிமுறைகள் பின்பற்றுதல், சாலையின் இருபுறமும் பாதுகாப்பாக கடந்து செல்வது, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ,வெங்கட் ராகவன்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முரளி, அமர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
