“மண்ணுலகில் பிறந்தோர் அனைவரும் ஒருமுறையாவது காண வேண்டிய தலம்” என்று போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனப் பெருவிழா இன்று பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனிக்கு புதிய சந்தனக்காப்பு பூசப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள ஐந்தரை அடி உயர பச்சை மரகத நடராஜர் சிலை, உலகிலேயே மிக அரிதான ஒன்றாகும். ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளால் இந்த விலையுயர்ந்த மரகதத் திருமேனி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஆண்டு முழுவதும் இச்சிலை சந்தனக் குழம்பால் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) பாதுகாக்கப்படுகிறது. ஆண்டில் ஒருமுறை மட்டுமே, அதாவது மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்திற்கு முன்தினம், இந்தச் பழைய சந்தனக் காப்பு களையப்பட்டு, மரகத மேனி பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்படும்.
நேற்று முன்தினம் காலை, பலத்த வேத மந்திரங்கள் முழங்க நடராஜர் மீதிருந்த பழைய சந்தனக்காப்பு களையப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பச்சை நிறத்தில் ஜொலிக்கும் மரகத நடராஜரை நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். விழாவின் உச்சக்கட்டமாக, இன்று அதிகாலை 4 மணி அளவில் ‘அருணோதய கால’ பூஜைகள் தொடங்கின. சூரிய உதயத்திற்கு முன்னதாகவே, புனித தீர்த்தங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி முழுவதும் புதிய சந்தனக் குழம்பு பூசப்பட்டது.
புதிய சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஜொலித்த நடராஜருக்கு பல்வேறு வண்ண மலர்களால் மாலைகள் சூட்டப்பட்டன. குறிப்பாக, நடராஜருக்கு மிகவும் பிரியமான மனோரஞ்சிதம் மற்றும் செண்பக மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆருத்ரா மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழக்கங்களை எழுப்பி மெய்சிலிர்க்க வழிபட்டனர்.
இந்தக் கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்து வரலாற்றுப் பின்னணி கொண்டது மட்டுமின்றி, “ஆதி சிதம்பரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வைபவத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டதால், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விரிவாகச் செய்திருந்தனர்.













