பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இத்திரைப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன்பு சினிமா பண்டி மற்றும் சுபம் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரதா தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

டிரெய்லரில், “கட்டாயமாக பரதா அணியும் வழக்கத்தை பின்பற்றும் ஒரு கிராமத்தில் இருந்து வரும் அனுபமா, தனது பயணத்தில் பெண்கள் மற்றும் உலகத்தைப் பற்றி புரிந்துகொள்ளும் காட்சிகள்” இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையில், சமீபத்தில் அளித்த நேர்காணலில் அனுபமா, தாம் நடித்து முடித்துள்ள பைசன் திரைப்படத்தைப் பற்றி கூறியுள்ளார். அதில் அவர்,
“மாரி சார் முதலில் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது நான் பல தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்ததால் டேட் இல்லாததால் மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த முடிவு குறித்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பின்னர் மாமன்னன் திரைப்படத்திலும் நடிக்க அழைத்தபோதும் சாத்தியமாகவில்லை.

ஆனால் மூன்றாவது முறையாக பைசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, இனி இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று நினைத்து ஏற்றுக்கொண்டேன். ஒரு நடிகையாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த படம் இதுதான்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version