சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் முறையான வடிகால் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட தேர் ஓடும் நான்கு வீதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் வகையில் தமிழக அரசு ரூ 2 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட தேர் தெற்கு வீதி, தேர் வடக்கு வீதி, தேர் மேலவீதி , தேர் கீழ வீதி ஆகிய நான்கு வீதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்கும்பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர் வடக்கு வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்படும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக நகர கழக செயலாளர் சுரேஷ் தலைமையில், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, நகர அதிமுக பொருளாளர் செந்தில்குமார் மற்றும் அதிமுகவினர் ஏராளமான சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும், 6 மற்றும் 7வது வார்டுகளில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நகராட்சி ஆணையர் சசிகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட ஆணையர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Exit mobile version