போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

சென்னை:
நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதற்கான பின்புலம் கடந்த மாதம் இடம்பெற்ற ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பார்ட்டியில், அ.தி.மு.க. ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். பின்னர், பிரசாத் மீது அரசு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதை வாங்கி வழங்கியதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, முன்னதாக கொக்கைன் வழங்கியதாகக் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் உள்ளிட்டோரிடமும் விசாரிக்கப்பட்டது.

பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிரசாத் ஒரு கிராம் கொக்கைன் (மதிப்பீடு ரூ.12,000) வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் ஜெயச்சந்திரனின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று, விசாரணை முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

மேலும் ஸ்ரீகாந்தை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு ‘தீக்கிரை’ எனும் திரைப்படத்தை மூன்று தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரித்து வந்தவரே பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் பார்ட்டியிலேயே இந்த போதைப்பொருள் வழங்கல் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version