சென்னை:
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது.
2006 முதல் 2011ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமைச்சர் பதவியில் இருந்தபோது, தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் மகனும் தொடர்புபடுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த காலத்தில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துத், மூவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட பிறகு, தீர்ப்பு தேதியை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) வந்த தீர்ப்பில், நீதிபதி வேல்முருகன், கடலூர் நீதிமன்றம் வழங்கிய விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து, ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.