பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இந்திய ராணுவமும், விமானப்படையும் ஒருங்கிணைந்து ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லைகளை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தி பதிலடி முயற்சி செய்தது. ஆனால் இந்தியா அதனை முறையாக தடுத்து அழித்தது. இதன் காரணமாக இருதரப்புகளுக்கும் இடையே போர் நிலை ஏற்பட்டு, பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இந்த நேரத்தில், சமாதானத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. பல நிலைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மறுபடியும் தாக்குதல் நடத்தியதால், இந்தியா கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது. இறுதியில், இருநாடுகளும் ஒரே நேரத்தில் தாக்குதலை நிறுத்தின.
இந்த நிலையில், மே 7 ஆம் தேதி காலை நடந்த ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களிடம் உரையாற்றினார்.
“முகத்திலேயே குத்துவோம்!”
பிரதமர் மோடி உரையில்
“பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. பயங்கரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக நடக்க முடியாது. பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களை வளர்க்கும் சக்திகளும் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். இனி அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம்,” என்றார்.
“பாகிஸ்தானின் இதயத்தை தாக்கினோம்!”
“பாகிஸ்தான் எங்கள் எல்லையை தாக்கியது. ஆனால் நாம் அவர்களின் இதயத்தை தாக்கினோம். பாகிஸ்தான் தாங்க முடியாமல் நம்மிடம் பேச்சு நடத்த முனைந்தது. இந்த தாக்குதலால் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. உலக பயங்கரவாதத்துக்கு தடை கட்டப்பட்டது,” எனவும் அவர் கூறினார்.
“இது பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!”
பிரதமர் மோடி உரையின் முக்கியப் பகுதி,
“ஆபரேஷன் சிந்தூர் வெறும் ஒரு ராணுவ நடவடிக்கையல்ல. இது மக்களின் உணர்வும், வைராக்கியமும். இது பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி. தாய்மார்களின், மகள்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் இன்று கண்டது,” என்றார்.
இத்துடன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள், அவர்களின் குடும்பங்கள், வீரர்கள் மற்றும் உளவுத்துறைகளின் பங்களிப்பு குறித்து நன்றியும் உருக்கத்தோடும் பாராட்டும் தெரிவித்தார்.