நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று பெரும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கேசவன்புதூர் பகுதியில் உள்ள தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் விடிய விடியப் போராடினர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தும்பு ஆலையில் திடீரென கரும்புகை வெளியேறியது. ஆலை வளாகத்தில் உலர வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்களில் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது. தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், நாகர்கோவிலில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஒரு வாகனமும் என மொத்தம் 3 வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர்.
தேங்காய் நார்கள் என்பதால் தீ உட்புறமாகத் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கிட்டாட்சி மூலம் நார்களைக் கிளறி விட்டு, சுமார் 5 மணி நேரம் கடுமையாகப் போராடி காலை 8 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஆலையிலிருந்த விலை உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் பல டன் தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலாகின. இதன் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், நாகர்கோவில் பறக்கை சாலையில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஆக்கர் கடையிலும் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பொருட்கள் எரிந்ததால் கரும்புகை சூழ்ந்து தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுசீந்திரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இன்று காலை ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையோரம் இருந்த புதரில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக வேகமாகப் பரவியது. குடியிருப்புப் பகுதிகளுக்குத் தீ பரவும் முன் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று அதனை அணைத்தனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே நாகர்கோவில் பகுதிகளில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகளைச் சீராகப் பராமரிக்க வேண்டும் எனத் தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

















