விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, மணிப்பால் இந்தியா பயோமெடிக்கல் சங்கத்துடன் கைகோர்த்து ‘சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப கூட்டு புதுமை’ (Collaborative Innovation in Healthcare and Technology) என்ற தலைப்பில் 4-வது தேசிய அளவிலான மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. எதிர்கால மருத்துவத் தொழில்நுட்பத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உயர்தர நிகழ்விற்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர். கல்வித்துறை இயக்குநர் என். ரஜினி தலைமை வகித்து, இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான திறன் அடிப்படையிலான கல்வி முறை மற்றும் நவீன கற்றல் செயல்முறைகளின் அவசியம் குறித்துப் விரிவாக உரையாற்றினார். ஆராய்ச்சி துறை இயக்குநர் எம்.பள்ளி கொண்ட ராஜசேகரன் மற்றும் டீன் பி.சிவகுமார் ஆகியோர் பேசுகையில், மருத்துவத் துறையில் கூட்டு கண்டுபிடிப்புகள் (Collaborative Research) எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக, கருத்தரங்கு அமைப்புச் செயலாளர் எஸ். சக்திவேல் அனைவரையும் வரவேற்றுப் பேச, பயோமெடிக்கல் துறைத்தலைவர் டி.அருண் பிரசாத் இந்த ஆய்வரங்கின் முக்கிய நோக்கங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். விழாவின் சிகர நிகழ்வாக, பெங்களூரு டிஎம்ஐ சிஸ்டம்ஸ் துணைத்தலைவர் எஸ். குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்ததுடன், விழாவின் சிறப்பு மலரையும் வெளியிட்டார். மற்றொரு சிறப்பு விருந்தினரான சென்னை அதீனாபாண்டியன் பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் அதீனாபாண்டியன், சுகாதாரப் பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகளை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்குவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, கோயம்புத்தூர் பிரஷான் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனர் பூபதி சக்திவேல் மற்றும் ஹீல்டெதர் ஹெல்த்கேர் சர்வீசஸ் நிறுவனர் வெங்கடேஷ் ராஜா ஆகியோரும் தொழில்நுட்பக் கருத்துரைகளை வழங்கினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 18 கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுத் தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்தினர். மொத்தம் 126 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுவரொட்டி விளக்கக்காட்சி (Poster Presentation), அறிவியல் வினாடி வினா மற்றும் ப்ராஜெக்ட் எக்ஸ்போ (Project Expo) போன்ற போட்டிகளில் 344 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மேம்பட்ட வசதிகளைப் பெறும் நோக்கில் டிஎம்ஐ சிஸ்டம்ஸ், அதீனா பாண்டியன் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரஷான் மெடிக்கல் டெக்னாலஜிஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொண்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற திறமையான மாணவர்களுக்கும், சிறந்த முறையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் சிறப்பு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் ராமநாதபுரம் சையத் அம்மாள் பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் சாதனை படைத்தது. பிஎம்இ இறுதியாண்டு மாணவிகள் டிரினிதா பிளெஸ்ஸி மற்றும் கோகுல் ஆகியோர் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த மெகா நிகழ்விற்கான ஏற்பாடுகளைத் தடையின்றிச் செய்திருந்தனர். நிறைவாக, எஸ்.காளிமுத்துக்குமார் நன்றி கூற, மருத்துவத் தொழில்நுட்ப உலகிற்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்த திருப்தியுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.
















