சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உயரதிகாரி ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, தனது சகோதரரின் காதல் திருமணத்தை தடுக்க காதலனின் தம்பியான சிறுவனை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த கடத்தலில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தனது வாகனத்தை பயன்படுத்த அனுமதித்து உதவியதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக, அதிலிருந்து ஜெயராமை கைது செய்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. போலீசார் அவரது அலுவலகத்திலேயே கைது செய்து, 10 மணி நேரம் மேலாக விசாரணை நடத்தினர்.
ஜெயராம் தரப்பில், சஸ்பென்ஷனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது “அவர் கைது செய்யப்படவில்லை எனில், ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், சஸ்பென்ஷனை தொடர்வது தேவை. அதில் எந்த மாற்றமும் இல்லை,” எனவும், அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.