புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாகக் கருதும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சசி தரூர் பாராட்டினார்.
சமீப காலமாக பிரதமர் மோடியை பாராட்டும் வகையில் அவரது பேச்சுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதனால், சசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. சில கட்சி தலைவர்கள் அவரை கண்டித்தும் விமர்சித்தும் வந்துள்ளனர். இருந்தாலும், சசி தரூர் தனது கருத்தில் நிலைத்திருக்கிறார்.
பாராட்டு உரையில் அவர் தெரிவித்ததாவது :
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கான ஒரு முக்கிய சொத்தாக இருக்கின்றன. இது இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டும் முயற்சியாகும். ஆனால் இதற்கு மேலும் அரசியல் மற்றும் மக்களிடையே வலுவான ஆதரவு தேவை.
அவர் சமீபத்தில் வெளிநாடுகளில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கங்களை வழங்கி, பிறகு நாடு திரும்பிய நிலையில் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது :
நாடு தொடர்ந்து பாடுபடுவதால், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய துறைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் உலகளவில் சிறந்ததாக இருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் என்பது சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சி ஆகும். எல்லை தாண்டி நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளிடம் விளக்கியுள்ளோம். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.