வதோதரா :
குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்திற்கு உள்ளானது. மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவ பயிற்சி குடியிருப்பில் விமானம் மோதியதில், 241 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த விபத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் பலியாகினர். அவர்கள் வாழ்க்கையின் கனவுகள், எதிர்பார்ப்புகள், குடும்பங்கள் என அனைத்தையும் ஒரே தருணத்தில் இழந்த நிலையில், இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலரின் வாழ்க்கைத் தகவல்கள் :
20 வயது மாணவர் – ருத்ரா
கேடாவின் மஹேம்தாவாட் பகுதியைச் சேர்ந்த ருத்ரா, மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தில் பலியாகினார். கனடாவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, லண்டனுக்கு மாணவர் விசா பெற்று பயணித்துக் கொண்டிருந்தார்.
மணிப்பூரைச் சேர்ந்த விமான பணிப் பெண்கள்
இம்பால் மற்றும் தௌபால் மாவட்டங்களைச் சேர்ந்த கொங்பிரைலட்பம் நந்தோய் சர்மா மற்றும் சிங்சன் லாம்னுந்தெம் ஆகிய இருவரும் இந்த விமான ஊழியர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் அண்மைக்கால இன மோதலால் காங்போக்பி மாவட்டத்தில் தற்காலிகமாக குடியேறியிருந்தனர்.
குடும்பம் முழுவதும் உயிரிழந்த சோகம்
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பிரதிக் ஜோஷி, மனைவி கோமி வியாஸ் மற்றும் குழந்தைகள் – இரட்டை குழந்தைகள் பிரத்யுத், நகுல் மற்றும் மகள் மிராயா – அனைத்தும் இந்த விமானத்தில் பயணித்தனர். குடும்பமே ஒருசேர அழிந்தது.
முதன்முறையாக விமானம் ஏறிய பயலின் கடைசி பயணம்
ஹிம்மத் நகரைச் சேர்ந்த பயல் காதிக் தனது முதலாளியின் சார்பில் லண்டனுக்குச் செல்வதற்காக தனது முதல் விமான பயணத்தில் புறப்பட்டிருந்தார். ஆனால் அந்த பயணம் அவரது கடைசியாய் மாறியது.
திருமணத்திற்கு இரண்டே நாளில் உயிரிழந்த பவிக்
ஜூன் 10 அன்று திருமணம் செய்துகொண்ட பவிக் மகேஸ்வரி, லண்டனில் பணியாற்றும் வாழ்க்கைக்குத் திரும்பியபோது இந்த விபத்தில் பலியானார். அவரது மனைவி இன்னும் லண்டனுக்குப் புறப்படவில்லை என்பது சோகத்தை மேலும் அதிகரிக்கிறது.
பிறந்தநாள் கொண்டாட உயிர் இழந்த ஹர்ப்ரீத்
இந்தூரைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் ஹோரா, தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக லண்டனுக்குச் செல்லும்போது விமானம் மோதியதில் பலியானார்.
செவிலியராக பணியாற்றிய ரஞ்சிதா
திருவல்லாவைச் சேர்ந்த ரஞ்சிதா, இங்கிலாந்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர். விடுப்பில் வந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணம்தான் இது. ஆனால், அவரது வாழ்க்கை நடுவழியிலேயே நின்றது.
உத்தரப்பிரதேச தம்பதியர்
நீரஜ் லாவானியா மற்றும் அவரது மனைவி, இருவரும் ஒன்றாக இந்த பயணத்தில் இறந்தனர். குடும்பத்துடன் வதோதராவில்தான் வசித்து வந்துள்ளனர்.
மற்ற பலர்
மகாராஷ்டிராவின் டோம்பிவ்லியைச் சேர்ந்த விமான ஊழியர் ரோஷ்னி சோங்காரே, ஹர்திக்பாய் அவையா மற்றும் அவரது வருங்கால மனைவி விபூதி, பல உயிர்கள் ஒரே தருணத்தில் சிதைந்து விட்டன.