மதுரை பேருந்து நிலையத்தில் தாராபுரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநரை காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக அதிகாரி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல வணிக மேலாளர் ஜெரோலின் என்பவர் வடசேரி பேருந்து நிலையத்தில் நடத்துநர் ஒருவரிடம் தரக்குறைவாக பேசியதாக வீடியோ வெளியாகியுள்ளது. பயணிகளின் முன்னிலையில் ஊழியரை கடுமையாக பேசியுள்ளார். அந்த வீடியோவில், நடத்துரை நீயெல்லாம் மனுஷனா…. எனவும் ” “லே” எனவும் பேசியுள்ளார். என்னது மெயின்ல புடிச்ச பு…….. என கெட்ட வார்த்தை பேசும் தொனியிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ போக்குவரத்து கழக தொழிலாளர்களிடையே வைரலாகி அதிர்ச்சியையும் பரபரபபையும் ஏற்படுத்தி வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோயில் மண்டல சி ஐ டி யு பொதுச்செயலாளர் சுரேஷ் கூறுகையில், தொழிலாளி அதிகாரி இடையிலான உறவுக்கு உகந்ததாக இந்த சம்பவம் இல்லை எனவும் பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர்களுக்கு அறிவுருத்தும் நிர்வாகம் அதிகாரி இதுபோன்ற தொழிலாளர்களுடனான உரிமையாக பேசிய நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த சம்பவத்தை போக்குவரத்து கழக நிர்வாகம் கண்டிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் சிஐடியு போராட்டத்தில் ஈடுபடும் எனவும் கூறினார்.