வாஷிங்டன் : அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவாற்றல் குறைபாடுகளை மறைப்பதற்காகவும், அதிபர் அதிகாரத்தை அவரது உதவியாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பைடனின் அதிகார உத்தரவுகள், பொதுமன்னிப்புகள், நிர்வாக ஆணைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில், அவர் நேரில் கையொப்பமிடாமல், “ஆட்டோபென்” கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ட்ரம்ப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனை விசாரணை செய்யும் வகையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்ட ஆலோசகர் பாம் பாண்டி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, பரந்த விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். “யார் உண்மையில் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தினார்?” என்ற கேள்வி எழுப்பப்படும் அளவுக்கு இந்த விவகாரம் சிக்கலானதாக உருவெடுத்துள்ளது.
“அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி இது. பைடனின் பெயரில் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். உண்மை மறைக்கப்பட்டது,” என ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஜோ பைடன், “எல்லா முடிவுகளும் எனது அறிவாற்றலும் தலைமையிலானவையாகத்தான் நடந்துள்ளன. வேறு யாராவது அதனை செய்ததாக கூறுவது பொய்யானது மற்றும் அபத்தமானது,” என்று தெரிவித்துள்ளார்.
ஆட்டோபென் கையொப்பங்கள் பற்றிய இந்த விவகாரம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி, சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.