திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் – பலமுறை புகார் அளித்த போதும் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாத தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை…
நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை குழிகளில் இருந்து சாக்கடை கழிவு நீர் வெளியேறி தெரு முழுவதும் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.
இது மட்டுமல்லாமல் இங்கு வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு பின்புறம் உள்ள பிளாட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஏரி போல தேங்கி இருக்கிறது. சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் ஆறடி உயரத்திற்கு கழிவு நீர் தேங்கி இருக்கிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றால் இப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் திருவாரூர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்த போதும், இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணாமல், அவ்வப்போது பெயரளவுக்கு மட்டுமே சாக்கடை கழிவுகளை மட்டும் வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
ஆனால் வீடுகளுக்கு பின்புறம் உள்ள பிளாட்டில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தாமல் அப்படியே கண்டும் காணாமல் இருப்பதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன.
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் தினந்தோறும் குறைந்தபட்சம் ஐந்து நபர்களாவது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை தான் உள்ளது என இப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டும் நாங்கள் மாதம் ஒருமுறை 5000, பத்தாயிரம் என்று மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் இவர்களது குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மூன்றடுக்கு தனியார் ரெஸ்டாரண்ட் தான் காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . அங்கு மொத்தம் 300க்கும் அதிகமான வாடகை ரூம்கள் உள்ளன. மேலும் 3 ரெஸ்டாரண்டுகள் உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் தான் எங்கள் வீடுகளின் பின்பகுதியில் உள்ள பிளாட்டுக்களில் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் கொசுக்கடி, துர்நாற்றம், பூச்சிகள் படையெடுப்பு, பாம்புகள் படையெடுப்பு என தினந்தோறும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் தனியார் ரெஸ்டாரன்ட் உரிமையாளரிடம் புகார் தெரிவித்த போதும் நாங்கள் திருவாரூர் நகராட்சிக்கு பணம் செலுத்தி விட்டு தான் செயல்பட்டு வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.
இது குறித்து திருவார் நகராட்சியிடம் தெரிவித்த போதும் முறையான நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளதாக கூறப்படுகிறது. ஏழை மக்களுக்கான மக்களான எங்களுக்கு ஒரு நியாயம். பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் என்று செயல்படுவதை விடுத்து உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர
பேட்டி : இலக்கியா, கஸ்தூரி, ரமேஷ்குமார் – பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்
















