24 மணி நேரத்தை கடந்தும் எந்த தகவலும் இல்லை நேபாளில் தேடப்பட்டு வரும் ஜஸ்டிஸ் சிவஞானத்தின் மனைவியின் சகோதரர் செந்தில்ராஜன் மயிலாடுதுறையில் பேட்டி அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவஞானம் நேபால் நிலச்சரிவு விபத்தில் சிக்கியுள்ளார். கும்பகோணம் சூப்பர் யாத்திரா ட்ராவல்ஸ் மூலம் சென்ற 57 பேரில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளதாக இதுவரை தகவல் வெளியாகி உள்ள நிலையில் தனது அத்தான் சிவஞானம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை என செந்தில் ராஜன் தெரிவித்துள்ளார். டோல் ஃப்ரீ எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் விபரத்தை குறித்துக் கொண்டு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் 24 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில் அரசு உடனடியாக இதில் துரித கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்














