தாய்மாமன் தங்க மோதிர திட்டம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விமர்சித்து பொதுவெளியில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் – பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைப்பாடு எடுத்து வருவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் கேசவ ராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் திமுக அமைச்சரும் முன்னாள் தாட்கோ தலைவருமான மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிபிஐ, திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் மணமக்களை வாழ்த்தி பேசும்போது கூறியதாவது…
அரசு மருத்துவமனையில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சர் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். இதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் நகை நிறுவனம் ஒன்று ஒரு பைசாவுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குகிறோம் எனக் கூறி டெண்டர் எடுத்துள்ளது. ஒரு கிராம் நகையை ஒரு பைசாவுக்கு விற்க முடியும் என்றால் தற்போது 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்ப்பதற்கான காரணம் என்ன..? ஒரு கிராம் தங்க நகையை ஒரு பைசாவுக்கே கொடுக்க முடியும் என்றால் நகை நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றி சம்பாதிக்கின்றனவா? பயங்கரமாக கொள்ளை அடிக்கின்றனவா..? உடனடியாக அரசு தலையிட்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது….
தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கும் நிலையில், தற்போது திடீரென்று தமிழக முதல்வர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்தது மட்டுமில்லாமல், அந்த காரை பராமரிப்பதற்காக 75 ஆயிரம், மேலும் உதவியாளர் வைத்துக் கொள்ள 25 ஆயிரம் ரூபாய் என மேலும் ஒரு லட்சம் தரப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து பேசும்போது எம்எல்ஏ ஒருவர் இன்னோவா கார் வேண்டும் என கேட்டுள்ளார். அடுத்து ஐந்து வருடம் கழித்து ஒரு பஸ் வாங்கி கொடுங்கள், என் வீட்டில் உள்ள அனைத்து சொந்தகாரர்களையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கூறும் நிலையும் உள்ளது என வேதனையுடன் கூறினார். ஐந்து வருடம் பதவி முடிந்தவுடன் இந்த காரை மீண்டும் ஒப்படைப்பார்களா..? அல்லது அவர்களை எடுத்துக் கொள்வார்களா.? என எந்தவித விளக்கமும் இல்லை. இது குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லை. நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை நான் கூறவில்லை. யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. ஏற்கனவே பொதுவாழ்வில், அரசியலில் இருந்தவர்களுக்கும் தற்போது இருப்பவர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே நான் இதை கூறினேன். இந்த மாற்றத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறினேன் என்றார்.
ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரே தமிழக வெற்றிக்கழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, பொதுவெளியில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













