ஊனமுற்ற பெண்ணிடம் 20 பவுன் நகையை அடமானம் பெற்றுக் கொண்ட தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகும் நகையை கொடுக்க மறுத்ததால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் வந்த பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. காவல்துறையினர் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி சென்றதால் பரபரப்பு…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் தனது சகோதரி மருத்துவ செலவுக்காக 20 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.5.70 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
அதனை மீட்பதற்கு செல்வி மற்றும் அவரது சகோதரி லதா ஆகியோர் அசல் மற்றும் வட்டிக்கு உரிய பணத்தை எடுத்துக் கொண்டு அடகு கடைக்கு சென்று அடகு வைத்த நகையினை மீட்க சென்றுள்ளனர்.
ஆனால் அடகு கடை உரிமையாளர் அசல் மற்றும் வட்டிக்கு உரிய தொகையை பெற்றுக் கொள்ளாமலும் நகையை திருப்பி அளிக்காமல் லதா குடும்பத்தினரை ஏமாற்றி வெளியே போ என மிரட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த பாதிக்கப்பட்ட லதா, வலங்கைமான் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு முதலானவற்றுக்கு பலமுறை புகார் மனு அளித்த போதிலும் வலங்கைமான் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட ஓம் முருகா அடகு கடை உரிமையாளரிடம் இதுவரை எந்த வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய லதா, அவரது சகோதரி செல்வி மற்றும் அவர்களது தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்தனர்.
இந்நிலையில் அவர்களது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்ற போது காவல்துறையினர் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி அவர்களை கண்டித்தனர். தமிழக முதல்வரே எங்களது கோரிக்கையை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாங்கள் உயிருடன் இருந்து இனி இந்த பலனும் இல்லை என்று தற்கொலை செய்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் லதா மனவேதனையுடன் தெரிவித்தார்.
அடமானம் வைத்த நகையை திரும்ப பெற முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெட்ரோல் பாட்டில் உடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது













