போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்:- 10 நாள்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு:-
மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றிவரும் தசரதன் என்பவர் தன்னுடைய 60-வது திருமணத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு வருகை தந்திருந்தார். அவருடன் உறவினர்கள் உள்ளிட்ட பலர் 6 அரசு வாகனங்களில் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழா முடிந்த பின்னர் அந்த வாகனங்களில், தரங்கம்பாடி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநரோ, நடத்துநரோ ஏதேனும் தவறு செய்துவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு 10 நாள்களில் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது, சிஐடியு மாவட்ட துணை தலைவர் சேகர் உடன் இருந்தார்.














