சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமி திருமணம் செய்யப்பட்டு 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக 1098 இலவச உதவி எண் மூலம் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் சிவன்மூர்த்தி (வயது 23) என்பவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்ததும், இதனால் சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சமூக நல அலுவலர் ஜீவா (56) என்பவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் மகளிர் போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவன்மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சிவன்மூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.














