இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம், 20க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் பயின்று வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்டும் மாற்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர், அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் உணவு உண்டு வருகின்றனர். தற்பொழுது கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரைகளில் மழை நீர் ஒழுகி, மிகவும் பலவீனமாக காட்சியளிக்கிறது. கட்டிடத்திற்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் காடுகள் மண்டியதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பெருகின. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பின்புறம் அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தை அப்பகுதியை சார்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்து, தகர பொட்டகை அமைத்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, கொட்டகை அமைக்க கூடாது என வாய்மொழி உத்தரவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மேல் நடவடிக்கை இல்லாத காரணத்தால், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதுடன் அதற்குரிய இடத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













