மயிலாடுதுறையில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா 2 கார், 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார் 5 பேரை கைது செய்து நடவடிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவின் பேரில் போதை தடுப்புபிரிவு தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தினர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்தர் மற்றும் அருண் தலைமையிலான தனிப்படை போலீஸார் மயிலாடுதுறை நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தரங்கம்பாடி சாலையில் வந்த 2 காரை போலீஸார் நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்றுள்ளது. உடன் போலீசார் காரை துரத்திச் சென்று அடியாமங்கலம் பகுதியில் மடக்கி பிடித்தனர். சோதனை செய்தபோது அதில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த மயிலாடுதுறை மேலஒத்தசரகை சேர்ந்த கணபதி(35), வேதம்பிள்ளைகாலனியை சேர்ந்த ராஜமாணிக்கம்(29), அண்ணாவீதியை சேர்ந்த விக்னேஷ்(28), பூம்புகார் மணிக்கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம்(26) மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கணபதி என்பதும் பிடிப்பட்ட கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவுடன் 2கார் மற்றம் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து எந்த மார்க்கமாக கஞ்சா கடத்திவரப்பட்டது, சோதனைச் சாவடிகளில் தப்பியது எப்படி, வேறு எந்தெந்த பகுதிக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்டது, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.














