தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பன்நல்லூர் கிராமத்தில் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய பிரதான சாலை ஓரத்தில் உள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் ஒன்று திடீரென முறிந்து மின்கம்பிகள் மீது சாய்ந்து சாலையில் விழுந்தது. அச்சமயத்தில் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அவ்விடத்தில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தரங்கம்பாடி தீயணைப்புத் துறையினர் மின் இணைப்பை துண்டித்து விட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையில் விழுந்து கிடந்த பனைமரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகள் சேதம் அடைந்துள்ளதா என்பது குறித்து பரிசோதித்து வருகின்றனர். மேலும் இதுபோன்று சாலை ஓரங்களில் உள்ள மிகவும் பழமையான மரங்களை ஆய்வு செய்து உடைந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிய மரங்கள் நடவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












