செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலை 11:30 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலர் முதல், அலுவலக உதவியாளர் வரை வேலைக்கு யாரும் வராமல் வெறிச்சோடிய அலுவலகம், யாருமே இல்லாத இடத்தில் ஏசி, மின் விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் மட்டும் இயங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :-
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு தலைமைச் செயலகத்தில், பத்து மணிக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலர்களும் வருகை தர வேண்டும் என அரசு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் காலை நேரத்தில் அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை மிகவும் தாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் இன்று காலை 11 மணி 30 நிமிடம் வரையில், செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள் என்று யாரும் வேலைக்கு வந்தால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வாட்ச்மேன் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். ஆனால் வட்டார வளத்தை அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அறைகளில் மின்விசிறியுடன், ஏசி சாதனமும் இயங்கிக் கொண்டிருந்தது. இதுபோல் அலுவலகம் முழுவதும் மின்விசிறிகள் மின்விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே மின் வெட்டு நிலவி வரும் நிலையில், மின்சாரம் சிக்கனம் தேவை இக்கணம் என்று மின்வாரியம் கூறுவது சாதாரண பொது மக்களுக்கு மட்டும்தான் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காலை வேளையில் அலுவலகம் வெறிச்சோடி நிலையில் மின்சாதனங்கள் மட்டும் இயங்கி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













