தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஈரோடு மத்திய மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில், “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் பெருந்துறை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. தேர்தல் களத்தில் எதிரணிகளை முறியடித்து, திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்கான வியூகங்களை வகுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
கூட்டத்திற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் கொண்டசாமி வரவேற்புரை ஆற்றினார். ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் தலைமை வகித்து, கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவர் பேசுகையில், “வருகின்ற திங்கள்கிழமை திருச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட அரசியல் மாநாட்டிற்கு, ஈரோடு மத்திய மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டிச் செல்ல அந்தந்த பகுதி நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாநாடு வரவிருக்கும் தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும்” என சூளுரைத்தார்.
மேலும், தேர்தல் பணிகளில் மைக்ரோ-மேனேஜ்மென்ட் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்திய அவர், “இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் பட்டியலைத் தனியாகத் தயார் செய்ய வேண்டும். அவர்கள் தபால் வாக்குகள் (Postal Ballots) செலுத்துவதற்குத் தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் மக்களின் பெயர்கள் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, புதிய வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், செல்வராஜ், பிரபு, சுப்பிரமணி, ராஜா மற்றும் அரசு வழக்கறிஞர் திருமலை, பொதுக்குழு உறுப்பினர் டி.ஜி.கே. பூபதி, பெருந்துறை நகராட்சி தலைவர் ஓ.சி.வி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஹேமலதா சம்பத்குமார், மாணவரணி ராசு (எ) கோபால், இளைஞர் அணி ராஜேஷ், குமார், அயலக அணி வெற்றி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் ஜி.கே. செல்வன், கோகிலா தங்கமுத்து, பாக்கியலட்சுமி, திவ்யா ஈஸ்வரமூர்த்தி மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் டி.சி.எஸ்., பால் சந்துரு (எ) சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதாக உறுதியேற்றனர்.















