ஓசூர் அதியமான் உள் விளையாட்டரங்கு வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக சிலம்பம் ஒன்றிய கூட்டமைப்பு சார்பிலான சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர் உலக அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டப் போட்டியில், கடும் போட்டிக்கு இடையே தமிழகத்தின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தில் திருப்பூர் மாணவர் எஸ். அட்ரிக் சிரில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் பயிலும் இவர், 18 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற தொடு சிலம்பம் தனிநபர் பிரிவில் பங்கேற்று, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றி எதிராளிகளை நிலைகுலையச் செய்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சர்வதேச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை வீழ்த்தி, இளம் வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த சாதனை படைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் சர்வதேசப் பெருமையைச் சேர்த்த மாணவர் அட்ரிக் சிரில்லை கௌரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது. இம்மாணவரைச் செதுக்கி, உலக அளவிலான போட்டிக்குத் தயார் செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், சிலம்பப் பயிற்சியாளர் சாரதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தப் பெரும் சாதனையைக் கொண்டாடும் விதமாக, பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் லாவண்யா மற்றும் தலைமை ஆசிரியர் கமலாம்பாள் ஆகியோர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகத்தின் தற்காப்புக் கலை இன்று உலக நாடுகளில் பரவி வரும் சூழலில், திருப்பூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் சர்வதேச மேடையில் முதலிடம் பிடித்திருப்பது விளையாட்டுத் துறையினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















