உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயியில் 10 முதல் 50 வயது வரையிலான இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய ஆசார முறைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரு மிக முக்கிய முடிவைத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் கே.ஜெயகுமார் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தையும், பக்தர்களின் இறை நம்பிக்கையையும் பாதுகாக்கும் பொருட்டு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வலுவான நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
சபரிமலையில் பெண்களுக்கான வயதுக் கட்டுப்பாட்டை நீக்கி, அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த பரபரப்புத் தீர்ப்பு, கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த கேரள அரசு, இளம்பெண்கள் வருகைக்குத் தடை தேவையில்லை என அறிக்கை அளித்திருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மறுஆய்வு மனுக்கள், தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் இறுதி விசாரணை செய்ய உள்ள நிலையில், மார்ச் 14-ஆம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில், கேரள அரசு தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானமே இறுதி முடிவு எடுக்கும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆசாரங்களைப் பாதுகாக்கப் போவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் கே.ஜெயகுமார், “சபரிமலை ஐயப்பன் கோயிலின் தொன்மையான ஆசார முறைகளின்படி, இளம்பெண்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவில் தேவஸ்தானம் உறுதியாக உள்ளது; இது குறித்து நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்தார். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திடீர் முடிவு, வரும் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அரசியல் தந்திரமா என்ற விவாதங்களும் தற்பொழுது எழுந்துள்ளன.

















