மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண் ஒருவரும், மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி. இவரின் தாயார் ராணிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிசை வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தை அளப்பதற்காக நில அளவீடு செய்ய சென்றுள்ளனர். நில அளவையர் ஆவணத்தை சரிபார்த்து தாயார் ராணி பெயரில் நிலம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். அதிர்ந்து போன செல்வி வில்லங்கச்சான்று பெற்று சரிபார்த்து உள்ளார். அதில் அதே பழைய பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்களுடன் கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகம் சென்ற செல்வி, சார்பதிவாளரை சந்தித்து போலி ஆவணம் தயாரித்து ராணி பெயரில் இருந்த நிலத்தை மாற்றி பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட சார்பதிவாளர் வருவாய்த் துறையினரிடம் மேல் முறையீடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியகத்தில் செல்வி ஏற்கெனவே புகார் மனு அளித்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்து, இன்று மாவட்ட ஆட்சியரகத்துக்கு மறைத்து எடுத்துவந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு செல்வி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
இதேபோல், மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு ராதாநல்லூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சக்திவேல் என்பவர் தனது சகோதரர் தனக்கு சேர வேண்டிய 3 ஏக்கர் நிலத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி மூன்றுசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருவேறு தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் மாவட்ட ஆட்சியகத்தில் பரபரப்பு நிலவியது.
















