தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தல் களத்தைக் காணத் தயாராகி வருவதால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் அதன் மீதே குவிந்துள்ளது. “தவெகவில் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர், அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை” என்றும், “கரூர் துயரம் போன்ற நிகழ்வுகளே அதற்குச் சான்று” என்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சமீபகாலமாகப் பிற கட்சிகளில் இருந்த சீனியர் தலைவர்கள் தவெகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) விசுவாசமான ஆதரவாளர்களும் இப்போது விஜய் பக்கம் சாய்ந்து வருவது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஓபிஎஸ்-ன் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ ஜே.டி.சி பிரபாகர், தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணனும் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான், இன்று புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்கு ஜே.டி.சி பிரபாகர் ஒரு பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர், “தவெகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவதுதான் அவருக்கு மிகச்சிறந்த முடிவாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து; அவர் விரைவில் இது குறித்த நல்ல முடிவை எடுப்பார்” என ஓபிஎஸ்க்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கட்சியின் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், “விஜய் தனது விரல் நுனியில் அனைத்து அரசியல் விவரங்களையும் வைத்துள்ளார்; அவர் எங்களை விட அனுபவம் வாய்ந்தவர், அவரின் கீழ் பணியாற்றுவது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
மறுபுறம், ஓபிஎஸ்சை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். எடப்பாடியின் இந்த விடாப்பிடியான நிலைப்பாட்டால், ஓபிஎஸ்க்கு அதிமுகவின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், பன்னீர்செல்வத்திற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியே தற்போதைய முதல் தேர்வாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராகத் தவெகவில் இணைந்து வருவது அவர் மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தமிழகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக ஜே.டி.சி பிரபாகர் கூறியுள்ள நிலையில், தன் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஓபிஎஸ் இறுதியில் செங்கோட்டையன், ஜே.டி.சி பிரபாகர் மற்றும் கு.ப.கிருஷ்ணன் வழியைப் பின்பற்றி விஜய்யுடன் கைகோர்ப்பாரா அல்லது டெல்லி தலைமையையே நம்பி இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















