நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுமையுடனும், மிகுந்த கலை நேர்த்தியுடனும் நடைபெற்று வந்த இந்தத் திருப்பணிகள் இன்று முழுமை பெற்று, புனித நீராடல் நிகழ்வுடன் நிறைவடைந்தன. கடந்த 2009-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஆர்.பிரபாகரன் அவர்கள் முறைப்படி அனுமதி பெற்றுத் தொடங்கிய இக்கோவில் திருப்பணிகள், காரைக்குடி ஸ்தபதி ராக்கப்பன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருப்பெற்றன. குறிப்பாக, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பெருமாளின் ‘தசாவதார’ சிலைகள் மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கும் கலைக் கூடமாகத் திகழ்கின்றன.
இந்த ஆன்மீக வைபவத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 28-ம் தேதி சுதர்சன ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் மங்கலமாகத் தொடங்கின. விழாவின் தொடக்கமாக யானைகள், குதிரைகள் மற்றும் பசுக்கள் அணிவகுக்க, பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்த கண்கவர் ஊர்வலம் ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. குடமுழுக்கிற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்திருந்த வேத விற்பன்னர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த 145 யாக குண்டங்களில் எட்டு கால யாகசாலை பூஜைகளை ஆகம விதிகளின்படி நடத்தினர். இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜீயர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டின.
இன்று அதிகாலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மங்கல இசை முழங்கத் புனித தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், ராஜகோபுரம், கருவறை கோபுரம் மற்றும் ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஹயக்ரீவர், ஆண்டாள் உள்ளிட்ட பிரதான சன்னதிகளின் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விமரிசையாக நடத்தப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணைத் தொட்டது. பட்டாச்சாரியார்கள் புனித நீரைத் தெளிக்க, பக்தர்கள் கோபுர தரிசனம் கண்டு பெருமாளை மனமுருக வேண்டினர். விழாவின் நிறைவாகப் பக்தர்களுக்கு மகா பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் அடுத்த 48 நாட்களுக்குத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற உள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

















