முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு வரலாற்று நிகழ்வை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணிக்கு சண்முகருக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
நாளை தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தலம் தற்போது பக்தர்களின் கடலாக மாறியுள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் சுமந்தும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து முருகப்பெருமானைச் தரிசனம் செய்தனர்.
தைப்பூசத் திருவிழாவான நாளை (பிப்ரவரி 1), திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். காலை 8.30 மணிக்குக் கடற்கரையில் தீர்த்தவாரியும், 10 மணிக்குச் சண்முகர் அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து பகல் 1 மணிக்குச் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்திற்குப் புறப்படுவார். நாளை மாலை 5 மணிக்குச் சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடைபெறும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிரமாகச் செய்து வருகின்றனர்.














