தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றிப் பொங்கல் பரிசுகளைப் பெற்றுச் செல்லும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான எஸ்.ஏ. காதர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காகக் கடைகளின் முன்பாக நிழற்கூடாரங்கள் (Pandal) அமைக்கப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்கவும், வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏதுவாகவும் இந்தப் பந்தல்கள் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற எஸ்.ஏ. காதர், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கிப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் வழங்கவில்லை; பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000, விடியல் பயணத் திட்டம் மூலம் இலவசப் பேருந்து வசதி எனப் பல்வேறு மகத்தான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே பிரதமர் மோடியை நேரடியாக எதிர்க்கக்கூடிய துணிச்சல் கொண்ட ஒரே தலைவர் நமது முதலமைச்சர் தான். அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசு சாமானிய மக்களுக்கான அரசாகத் திகழ்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வை மக்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்” என அரசியல் ரீதியாகவும் சூளுரைத்தார்.
இந்த நலத்திட்ட விநியோக விழாவில் ஓட்டுநர் அமைப்பு சாரா சங்கம் அமைப்பாளர் பிரபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், அவைத்தலைவர் பழனிசாமி, வட்டச்செயலாளர் முத்தலி, மாவட்ட பிரதிநிதி ஷானவாஸ், டிஸ்கோ அம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அக்பர், அஸார், அபு, அப்துல்லா மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பாஸிலா, ராபி, பர்க்கத், ஷிபானா, சிந்து, ஷபானா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆத்துப்பாலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஏற்பாடுகள், பொங்கல் பரிசு பெற வந்த மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












