சென்னை:
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட ஆட்சேபனை காரணமாக, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தணிக்கை குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் தெரிவித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனை எதிர்த்து, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணையின்போது, படத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பான விவரங்களை, தணிக்கை வாரியம் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவித்தார்.
தீர்ப்பில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகார் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரு உறுப்பினரின் புகாரை மட்டும் கொண்டு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார். மேலும், படத்திற்கு ஏற்கனவே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு தணிக்கை வாரியத் தலைவருக்கு கூடுதல் அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு விரைவாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

















