மதுரை ஜி.ஆர்.டி ஹோட்டலில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தேசிய சணல் வாரியம் இணைந்து நடத்திய “ஜூட்மார்க் இந்தியா” (Jute Mark India) திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், சணல் பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த முகாமில் சணல் பொருட்கள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் எனப் பலதரப்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகக் கொல்கத்தா தேசிய சணல் வாரிய இயக்குநர் கிஷான்சிங் கலந்துகொண்டு முகாமினைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், “சணல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ‘ஜூட்மார்க் இந்தியா’ ஒரு மைல்கல்லாக அமையும்; இது நுகர்வோருக்குத் தரமான சணல் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், சர்வதேச சந்தையில் இந்தியச் சணல் பொருட்களுக்கான மதிப்பை உயர்த்தும்” என விரிவாக விளக்கினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ‘சிப்போ’ (SIPPO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ராஜகோபால், தொழில் முனைவோர் தரச்சான்றிதழ் பெறுவதன் மூலம் அடையக்கூடிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய சந்தை போட்டித்திறன் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த முகாமில் மும்பை ஜவுளிகுழு இணை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.முரளிதரா, மதுரை பெட்கிராட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சணல் துறையில் உள்ள நவீனத் தொழில் நுட்பங்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினர். குறிப்பாக, ஜூட்மார்க் முத்திரையில் உள்ள கியூ.ஆர் குறியீடு (QR Code) மூலம் ஒரு பொருளின் உண்மைத்தன்மையை எவ்வாறு கண்டறிவது, இந்த முத்திரையைப் பெற விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்துப் பங்கேற்பாளர்களுக்குத் திரையில் விளக்கிக் காட்டப்பட்டது. தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் எம்.சதீஷ், வி.என்.கௌரிசங்கர் மற்றும் முகமதுவாசிம் ஆகியோர் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். சணல் துறையைச் சார்ந்தவர்களுக்குத் தர நம்பகத்தன்மை மற்றும் புதிய சந்தை வாய்ப்புகள் குறித்த ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்திய இந்த முகாம், தென் தமிழகத்தின் சணல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்தது.














